2. உலகம் முழுவதும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது சபையின் பிரதான வேலையா?
எசேக்கியல் 3: 17-19 ஆம் வசனங்களைத் தியானிப்போம். இவ்வேத பாகத்தை வாசிக்கும் தருணமெல்லாம் "அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்." எங்கிற வார்த்தைகள் என் இருதயத்தை நடுங்கச் செய்யும். என் ஜீவியத்திலே சுவிசேஷப் பிரபல்யத்திற்கேதுவான சில பொன் மொழிகள் அடிக்கடி என்னை மிகவும் நெருக்கி ஏவினதுண்டு. அவைகளில் ஒன்று: திருச்சபையின் பிரதான வேலை உலகம் முழுவதிலும் சுவிசேஷத்தைக் கூறி அறிவிப்பதே. இதை நான் விசுவாசித்து, என் ஜீவியத்தின் குறிக்கோளாக வைத்திருக்கிறேன்.
உலகம்:
நான் மேற்சொல்லிய குறிக்கோளில் உள்ள மூன்று வார்த்தைகளை ஒவ்வொன்றாக வற்புறுத்திக் காட்டப்போகிறேன். 1. ''உலகம்: தேவனுடைய அன்பு உலகத்தை அணைத்துக்கொள்ளுகிறது. தேவன் உலகத்தில் அன்புகூர்ந்து, அதற்காகத் தமது குமாரனைக் கொடுத்தார். இயேசு கிறிஸ்துவும் அந்த உலகத்திற்காகவே மரித்தார். இவ்வண்ணமே, நமது நோக்கம் உலகத்தைப் பற்றி இருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
பார்வையில் மட்டுள்ளவர்களாக நம்மில் அநேகர் இருக்கிறோம். நாம் நமது சொந்த சமூகத்தையும், சொந்த கிராமத்தையும், பட்டணத்தையுமே பார்க்கிறோம், அதற்கப்பாலே நமது பார்வை செல்லுகிறதில்லை. தங்கள் சொந்த சபையப்பற்றியே யோசிப்பவர்கள் உண்டு. இவர்களுக்கு மற்றவர்கள் செய்வதைக் குறித்துக் கவலையில்லை. இன்னும் சிலர் கொஞ்ச தூரம் மட்டும் பார்த்துத் தங்கள் நகரத்தையும், மாகாணத்தையும் யோசித்து அங்கு சுவிசேஷ வேலை செய்யத் தயாராயிருக்கின்றனர். இவர்களும் பார்வையில் குறுகினவர்களே. இதைவிட இன்னும் கொஞ்ச தூரம் எட்டிப் பார்க்கிறவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் முழு தேசத்தையும் பார்த்து அங்கு வேலை நடப்பிக்கச் சித்தமாயிருக்கிறார்கள். இவர்களுங்கூட பார்வையில் மட்டுள்ளவர்களே. எப்படியெனில், இவர்கள் தங்கள் தேசத்தின் எல்லைக்கு வெளியில் தங்கள் கண்களை ஏறெடுக்கிறதில்லை. இன்னும் சற்று தூரமாய்ப் பார்க்கிறவர்களும் உண்டு. அவர்கள் ஒரு கண்டத்தைப் பார்த்து, அதில் தங்களாலியன்ற சுவிசேஷ ஊழியத்தைச் செய்யத் தயாராயிருக்கின்றனர். இவர்களும் பரந்த பார்வையற்றவர்களே. ஏனெனில் இவர்கள் தங்கள் கண்டத்திற்கு அப்பாலே பார்க்கிறதில்லை. முழு உலகத்தையும் பார்க்கிற சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அகில உலகத்திலுமுள்ள நிலப்பரப்புகள் எல்லாவற்றையும் ஒருங்கே நோக்குகிறார்கள். அவர்கள் பார்வையுள்ளவர்களாய் இருக்கவேண்டுமெனக் கர்த்தர் விரும்புகிறார். ஊழியத்தில் உலக மேன்மையான பார்வையே நமக்கு அவசியம் தேவை.நம்மில் அநேகர் பார்வையில் குறுகினவர்களாய் இருப்பதன் காரணமென்ன? நாம் ஏன் நம்மை மாத்திரம் யாசிக்கிறோம்? கடவுள் தூரத்தில் வசிக்கும் மஞ்சள் நிறமான மனிதர்களைவிட, இங்கே வாழும் கருப்புநிற மனிதர்களிடம் அதிகக் கரிசனை காட்டுகிறாரா? வெள்ளை நிறமானவர்களைவிடப் பழுப்பு நிறமானவர்களிடம் அதிகக் கவலையுள்ளவராயிருக்கிறாரா? நமக்குக் குறுகின பார்வை இருக்கிறதினாலே உலகப் பார்வை இல்லை. நான் ஜமேக்காத் தீவை விட்டபோது ஓர் ஆகாய விமானத்தில் ஏறினேன். முதலாவது நான் அந்த இடத்தின் சுற்றுப்புறங்களை மட்டும் பார்த்தேன். கொஞ்சம் உயரம் போனவுடன் வயல்களையும், வீடுகளையும் பார்த்தேன். உயரமாய் ஏற ஏறத் தூரத்திலுள்ள பள்ளத்தாக்குகளையும் மலைகளையும் மாத்திரமல்ல, தீவு முழுவதையும் நான் பார்த்தேன். நான் இன்னும் மேலே போயிருந்தால் மேற்கு இந்தியத் தீவுகள் எல்லாவற்றையும் ஒரே பார்வையில் பார்த்திருக்கலாம்.
கடவுள் உன்னதத்திலிருந்து பார்க்கிறதினாலே, முழு உலகத்தையும், அதிலுள்ள ஒவ்வொரு தேசத்தையும், கண்டத்தையும், தீவையும் ஒரே பார்வையில் பார்க்கக் கூடியவராயிருக்கிறார். உன்னதங்களில் ஏறக்கூடுமானால் நாமும் இயேசு கிறிஸ்து பார்க்கிற பிரகாரம் உலகம் முழுவதையும் பார்க்கக்கூடும். முதலான நாடுகளில் நான் பயணம் செய்தபோது, அங்கெல்லாம் "நாங்களே ஜனங்கள்"
என்ற குரலையே கேட்டேன். மக்களுக்கு உலகப் பார்வை இல்லாததால் அவர்கள் இவ்வாறு நினைத்துப் பேசுகிறார்கள்.
முதலான நாடுகளில் நான் பயணம் செய்தபோது, அங்கெல்லாம் "நாங்களே ஜனங்கள்" என்ற குரலையே கேட்டேன். மக்களுக்கு உலகப் பார்வை இல்லாததால் அவர்கள் இவ்வாறு நினைத்துப் பேசுகிறார்கள். ஜனத்தொகையில் நாம் அதிகமாயிருக்கிறதால் "நாங்களே ஜனங்கள்" என்று எண்ணுகிறது தவறு. தேவன் திரளான எண்ணிக்கையில் சிரத்தை கொண்டு பாரபட்சமான அக்கறை காட்டுகிறவர் அல்ல. எவ்வகையான உலகக்காரியங்களைக் கொண்டும் "நாமே முக்கியமானவர்கள்" என்று கருதுவது, நமக்குப் பரந்த உலக நோக்கமில்லை என்பதைக் காட்டுகிறது கிறிஸ்தவ அன்பரே! மற்ற ஜாதியாரைவிட நம்மேல் தேவன் அதிகக்கரிசனையாயிருக்கிறார் என்று நாம் சிந்திப்பானேன்? தேவன் அன்புகூர்ந்த முழு உலகிலும் நாம் சுவிசேஷம் அறிவிக்கத்தக்கதாக அவர்லுள்ள உலகரீதியான பார்வை நம்மிலும் இருக்கும்படி அவர் செய்வாராக.
பிரதானம்:
இப்போது நமது குறிக்கோளில் உள்ள 2வது வார்த்தையாகிய பிரதானம் என்பதைக் கவனிப்போம். உலகம் முழுவதிலும் சுவிசேஷத்தை அறிவிப்பதே சபையின் பிரதான வேலை.உலகம் முழுவதும் சுவிசேஷப் பிரபல்யம் செய்வது நமது முக்கிய வேலையானால், அதற்குரிய மாநாடுகள் நடைபெறுகையில், நாம் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஆஜராயிருக்கவேண்டும். அப்படிச் செய்யாவிடில் வேறு அலுவல்களுக்கு நாம் முதல் ஸ்தானம் கொடுத்து, நமது கிரியைகளினால் சுவிசேஷ ஊழியத்தை இரண்டாவது இடத்தில் வைக்கிறோம்.
இரண்டாவதாக, உலகம் முழுவதும் சுவிசேஷம் அறிவிப்பதே பிரதானம் என நாம் எண்ணினால், அயல் நாட்டுச் சுவிசேஷப் பிரபல்யத்திற்குப் பண உதவி செய்வதில் நாம் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். உலகப்பார்வை இல்லாதவர்கள் மற்றக் காரியங்களுக்குக் கொடுக்கட்டும். உள்நாட்டு வேலைகளுக்கு எப்பொழுதும் அதிகப் பணம் உண்டு. ஏனெனில் சொந்த நாட்டின் வேலையை முதலில் கவனிக்கிறவர்கள் அநேகர் இருக்கிறார்கள். நாம் அயல் நாட்டுச் சுவிசேஷ ஊழியத்தைப் பிரதானமாக எண்ணினால், மற்ற எந்தக் காரியத்திற்கும் கொடுப்பதைவிட அதிகப் பணம் அதற்குக் கொடுக்கவேண்டும். அப்படி நாம் செய்யாமற்போனால், சுவிசேஷ ஊழியத்தை நாம் முதல் ஸ்தானத்தில் வைக்கவில்லை; அது திருசபையின் பிரதான வேலை என நாம் நம்பவும் இல்லை. ஒவ்வொரு சபையும் தன் சொந்தக் காரியங்களுக்குச் செலவழிக்கிறதைவிட அதிகமாய் அயல்நாட்டு ஊழியத்திற்குச் செலவழிக்க வேண்டும் என்று நான் சொல்ல வேண்டியவனாயிருக்கிறேன். இதுவே நியாயம்,
நீங்கள் என்னைப் பார்த்து, "நீங்கள் போதகராயிருக்கும் உங்கள் சபையைக் குறித்து என்ன? உங்கள் சபை தனக்குச் செலவழிக்கிறதைவிட அதிகப் பணம் அந்நிய நாடுகளுக்கு அனுப்புகிறதா?" என்று கேட்கலாம்.நான் அச்சபைக்குப் போதகரான வருடந்தொடங்கி எந்த வருடத்திலாகிலும் அயல்நாட்டுச் சபைகளுக்கு அனுப்பின பணத்தைப்போல் அவ்வளவு பணம் எங்கள் சொந்தச் சபைக்குச் செலவழிக்கவேயில்லை என நான் சந்தோஷமாய்ச் சொல்லக்கூடும். கடந்த வருடத்தில் நாங்கள் எங்கள் வேலைக்காக ரூ 1 56 000 செலவழித்தோம் ஆனால் அயல்நாட்டு ஊழியத்திற்காக ர்ர் 11 28 000 கொடுத்தோம். என்னுடைய சபையின் உத்தியோகஸ்தர்கள் உள்நாட்டு வேலைக்கு அதிகப்பணமும், மிஷன் ஊழியத்திற்குக் குறைவாகவும் செலவழிக்கத் தீர்மானஞ் செய்யுங்காலம் எப்பொழுதாவது வருமாயின், உடனே நான் வேலையை இராஜினாமா செய்து விடுவேன். தன்னயமாகத் தங்கள் சொந்த சபைக்கு அதிகமாயும், தூரத்திலுள்ள மக்களுக்குக் கொஞ்சமாயும் கொடுக்கும் சபைக்கு நான் போதகராயிருக்க மாட்டேன்.
அநேக ஆண்டுகளுக்குமுன் டொரண்டோவிலுள்ள மக்கள் சபை போதகரான சமயத்தில், முதல் ஞாயிறுகாலையில் பொக்கிஷதார் என்னை அனுகி, "டாக்டர் ஸ்மித், இந்தச் சபையைக் குறித்து எல்லாச் செய்திகளையும் உங்களுக்குச் சொல்ல்விட்டோம்; ஆனால், ஒன்றைமட்டும் சொல்லவில்லை. இந்தச் சபை அதிகச் கடனுக்குள் இருக்கிறது, ஒரு பெரிய தொகை கொடுக்க வேண்டும். சபை நிதியில் ஒன்றும் இல்லை" என்றார். அக்கடனைத் தீர்க்க நான் என் பையிலிருந்து பணத்தை எடுத்துத் தமது கையில் கொடுக்க எதிர்ப்பார்த்தது போல் அவருடைய தோற்றம் இருந்தது.
உடனே நான் அவரை விட்டு பிரிந்து பிரசங்க பீடத்தண்டை போய் ஜெபம் செய்தேன். "கர்த்தாவே, முதலாவது தேவனுடைய இராஜ்யத்தைத் (அகில உலக இராஜ்யத்தை) தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்" என்ற உமது வேத வசனப்படி நீர் கிரியை செய்யும்; உமது வசனம் யதார்த்தம் என நிரூபித்துக் காட்டும் என்று ஜெபித்தேன்.
அன்று காலையில் நான் சுவிசேஷப் பிரபல்யத்தைப் பற்றிப் பிரசங்கம் செய்தேன். சாயங்காலத்திலும் அதைப் பற்றியே பேசினேன். அந்த வாரம் ஒவ்வொரு நாள் இரவிலும் ஜனங்களை ஆலயத்திற்கு அரும்படி அழைத்தேன். அநேகர் ஆச்சரியத்துடன் வந்தனர். ஒவ்வொரு இரவிலும் சுவிசேஷ ஊழியத்தைப்பற்றியே பிரசங்கம் செய்தேன். இரண்டாம் ஞாயிறு வந்தது. அந்த நாளின் சம்பவம் நேற்று நடந்தாற்போல என் ஞாபகத்திலிருக்கிறது. காலை ஆராதனையில் நான் சொன்ன விளம்பரம் என்னவென்றால், "நாம் இன்று மூன்று ஆராதனைகள் நடத்தப் போகிறோம்; ஒவ்வொரு ஆராதனையிலும் சுவிசேஷப் பிரபல்யத்திற்காகக் காணிக்கை வாங்கப்படும்" என்று சொன்னேன். சிலர் ஆச்சரியத்துடன் என்னை நோக்கிப் பார்த்தார்கள். எங்கள் சொந்த சபையின் தேவையைப்பற்றி ஒரு வார்த்தையாவது நான் பேசவில்லை. அதன் முடிவு என்ன?’
ஜனங்கள் மிகவும் உற்சாகமும், எழுப்புதலும் அடைந்து கூட்டங் கூட்டமாக ஆலயத்திற்கு வந்தனர். ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டனர். சீக்கிரத்தில் அவர்கள் தூரப்பார்வையும் பெற்று இதற்குமுன் ஒருபொழுதும் கொடுத்திராவண்ணம் உதாரத்துவமாய் காணிக்கை கொடுத்தார்கள். சொந்தச் சபையின் கடனைக் குறித்து ஏறத்தாழ ஒரு வார்த்தையும் சொல்லாமலிருந்தும், சில வாரத்தில் எல்லாக் கடன்களும் தீர்ந்தன: எல்லாச் செலவுகளுக்கும் பணம் மீந்திருந்தது. அந்நாள் முதற்கொண்டு, இந்நாள் மட்டும் எங்கள் சபை சம்பந்தமான எந்த வேலையிலும் கடனே இல்லை.தற்காலம் அநேக சபைகளின் குறைவு என்னவென்றால், வண்டியைக் குதிரைக்கு முன் பூட்டி, போதகரை வண்டியின்மேல் ஏற்றி ஓட்டும்படி சொல்லுகிறதைப் போலிருக்கிறது, வண்டியோ போகிறதில்லை. இந்த ஒழுங்கை மாற்றி, கடவுளின் ஒழுங்கை நாம் ஏற்றுக்கொண்டால் மட்டும் நாம் வண்டியில் ஏறிப்போகலாம்; வண்டியும் இலகுவில் ஓடும். முதலாவது கடவுளின் இராஜ்யம் உலகமெங்கும் பரவ நாம் தேடுவோம். அப்பொழுது மற்றவைகளெல்லாம் நமக்குக் கூடக் கொடுக்கப்படும். கடவுளின் வாக்கு ஒருக்காலும் தவறாது.
சபை:
நான் அழுத்திக் கூறவேண்டிய மூன்றாம் வார்த்தை சபை என்பதே. உலகம் முழுவதும் சுவிசேஷத்தை அறிவிப்பதே சபையின் பிரதான வேலை.சபை என்று சொன்னால் சபையின் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரையும் அது குறிக்கும். ஏதோ ஒரு பகுதியாரை மட்டும் அது குறிக்கிறதில்லை. நாம் அனைவரும் சுவிசேஷப் பிரபல்ய சங்கத்தின் அங்கங்களே. ஒவ்வொரு மேய்ப்பரும், உதவிக்காரரும், கோயில் குட்டியும், ஓய்வு நாள் பாடசாலை உபாத்தியாயரும், ஆணும், பெண்ணும் சுவிசேஷ பிரபல்யத்திற்குப் பண உதவு செய்யவேண்டும். எங்கள் சபையிலுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்காகப் பணம் கொடுக்கிறதில்லை. பிள்ளைகள் தாங்களாகவே கொடுக்கும்படி நாங்கள் அவர்களுக்குக் கற்பிக்கிறோமே. பிள்ளைகள் 5 அல்லது 6 வயதாகும்போது அவர்கள் எப்படி ஒழுங்காய்க் கொடுக்கவேண்டுமென நாங்கள் அவர்களுக்கு எடுத்துக் கற்பிக்கிறோம். அவர்கள் பெரியவர்களாகும்பொழுது அவர்களைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. எப்படிக் கொடுக்க வேண்டுமென அவர்கள் கற்றிருக்கிறார்கள்.அயல்நாட்டுச் சுவிசேஷ ஊழியம் மிகவும் முக்கியமானதால் அதன் பொறுப்பை ஒரு சங்கத்திற்கு மட்டும் கொடுக்கிறது சரியல்ல. இந்த உத்தரவாதம் முழுச் சபைக்கும் உரியது. ஒவ்வொருவரும் இதப்பற்றியே தெளிவான அறிவு அடைந்து ஏதாகிலும் செய்தால் நம்முடைய இலக்கு நிறைவேறும். நமது வரவு செலவு திட்டமும் சரியாகும். "ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு மிஷனரி" என்பதே நம்முடைய நீதிவாக்கியமாகட்டும் இவ்வேலை முழுச் சபையின் வேலையே.
இது எப்படி ஆகும்?
நான் போகும் ஒவ்வொரு இடத்திலும் பின்வரும் கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். "நீங்கள் எப்படி இவ்வளவு காணிக்கைகளைச் சேர்க்கிறீர்கள்? பணம் எங்கிருந்து வருகிறது? உங்கள் சபையில் இலட்சாதிபதிகள் இருக்கவேண்டும்!" என்பதே.
ஒரு தினசரிப் பத்திரிகையில் நான் வெளியிட்டிருந்த அறிக்கையைக் கனடா ரோமன் கத்தோலிக்க இதழின் நிருபர் வாசித்தபோது மேற்கூறியவாறே யோசித்தார். அவர் என்னிடம் எழுதி விசாரித்தார். என் சபையில் இலட்சாதிபதிகள் ஒருவரும் இல்லை என்று நான் அறிவித்தபோது, அவர் வியப்படைந்தார். தன்னுடைய பிரசுரத்தில் ஒரு நீண்ட கட்டுரையை எழுதினார். அது என்னவென்றால், "ஒரு புராட்டெஸ்டண்டு சபை, உற்சாகமுள்ள ஒரு போதகரால் நடத்தப்படுகிறது. கனடா தேசமெங்கும் நமது கத்தோலிக்க சபைகள் முழுவதும் கொடுக்கிற பணத்தைவிட அதிகமான தொகையை அந்த ஒரே சபை சுவிசேஷ ஊழியத்திற்காகக் கொடுக்கிறது. விசுவாசத்தை உண்மையானபடி பாதுக்காக்கிறவர்கள் நாம் தான் எனச் சொல்லியும், ஒரு புராட்டெஸ்டண்டு சபை நமக்கும் மேல் ஸ்தானத்தில் நிற்கும்படி நாம் இடம் கொடுக்கிறோமே. இது நமக்கு வெட்கம்" என்று எழுதினார். கத்தோலிக்கர்கள் அதிகமாய்க் கொடுக்கும்படி அவர்களை ஏவி எழுப்பிவிடுவதே அவரது நோக்கம். உண்மையாய் சொல்லுகிறேன். எங்கள் சபையில் இலட்சாதிபதி ஒருவ்ரும் இல்லை. எங்கள் சபைக்கு மூலதனமும் இல்லை. எங்களுக்குக் கிடைக்கும் பணம் ஏராளமான சாதாரண ஜனங்கள் கொடுக்கும் கொடையே.
அந்நிய நாட்டு மிஷன் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பெரிய சபையின் உத்தியோகஸ்தர், எங்களுடைய காணிக்கை உயர்வின் இரகசியம் என்னவென்றும், தம்முடைய சபையின் ஈகை குறைந்துப் போவதின் காரணம் என்னவென்றும் என்னிடம் கேட்டு அறிய விரும்பினார். நான் அவரைப் பார்த்து: "ஐயரே, நீங்கள் மிஷன் சுவிசேஷ ஊழியத்தை உங்கள் வரவு செலவு கணக்கில் வைத்து, ஒருவருக்கும் அதை விளம்பரம் செய்யாமல் பணத்திற்காக ஜனங்களிடம் வேண்டுதல் செய்கிறீர்கள். அதன்பின் வருகிற பணத்தை உங்கள் இஷ்டப்படி செலவு செய்கிறீர்கள், இது சரியல்ல. உலக சுவிசேஷ பிரபல்ய தேவை அத்தனை முக்கியமாதலால் அதை வரவு செலவு கணக்கில் வைக்கலாகாது. எல்லாரும் அறியத்தக்கதாக அதைப்பற்றி விளம்பரம் செய்யவேண்டும். யாவரும் அதைக்கேட்கவேண்டும். முற்காலத்தில் மாணவர்கள் கூடி சுயேச்சையாக மிஷனெரி ஊழியஞ்செய்ய எவ்விதமாய்த் தங்களை ஒப்புக்கொடுத்தார்களோ அவ்விதமே நீங்களும் செய்யவேண்டும். வரவு செலவு கணக்கிற்கு ஜனங்கள் பணம் கொடுக்கமாட்டார்கள். அவர்கள் உற்சாகமந்தால்தான் பணம் கொடுப்பார்கள்" என்றேன். நான் சொன்னது சரி என்று அவர் ஒப்புக்கொண்டார்.
No comments:
Post a Comment