Monday, November 8, 2010

"மறக்க முடியாத மாமனிதர்கள்"

11. சார்லஸ் மீட் 1782 - 1873

அந்நாட்களில் இங்கிலாந்தின் அனைத்துத் திருச்சபைகளிலும் மிஷனெரிப்பணி பற்றிய பேச்சாக இருந்தது. இந்தியா, சீனா தேசங்களுக்கு மிஷனெரியாகப் சென்றுள்ளவர்களின் சாட்சிகள் மற்றும் கஷ்டங்களைப் பகிர்ந்துகொள்ளும் கடிதங்கள். அத்தேசத்தின் கிளவ்செஸ்டர் மாநிலத்திலுள்ள பிரிஸ்டல் என்னும் ஊரில் ஒரு பக்தியான குடும்பத்தில் 1782 ம் வருடம் அக்டோபர் 1-ம் நாள் சார்லஸ்-ஐ தானும் மிஷனெரியாகத் தூர தேசம் சென்று ஆத்துமாக்களை ஆதாயம் செய்யவேண்டுமென்கிற வாஞ்சையை உண்டாக்கியது.

டாக்டர் போக் (Dr. Bogue) நடத்திய கூட்டத்தில் ஒருநாள் வாலிபனான சார்லஸ் மீட் கலந்து கொண்டபோது, மிஷனெரிப் பணிக்கு ஆண்டவர் தன்னை அழைப்பதை உணர்ந்து, டாக்டர் போக்-கிடம் தன்னை ஆண்டவர் இந்தியாவில் ஊழியம்செய்ய அழைப்பதை உணர்வதாகக் கூறினார். டாக்டர் போக், சார்லஸ்ஸை உற்சாகப்படுத்தி, காஸ்போர்ட் என்ற இடத்திலுள்ள வேதாகமக் கல்லூரியில் சேர்ந்து, படிக்க உதவி செய்தார். பயிற்சி முடிந்ததும் 1816-ல் போதகராகவும் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

லண்டன் மிஷனெரிச் சங்கத்தாரால் ஏற்கெனவே இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு, கடினமாக உழைத்து சுகவீனமாகி இங்கிலாந்துக்குத் திரும்பும் ரிங்கல்தெளபேயின் ஊழியங்களை ஏற்று நடத்தும் பணியைச் செய்ய சார்லஸ் மீட் பணிக்கப்பட்டார். ஊழியபாரம் கொண்ட ஹண்ட் என்ற போதகரின் மகளை மணந்து, 1816 ம் ஆண்டு இந்தியா பயணமானார். கப்பலில் சார்லஸுடன் சேர்ந்து ஒன்பது ஊழியர்கள் பயணம் செய்தனர். பயணிகளுக்கு சுவிசேஷம் அறிவித்து தினமும் நற்செய்திக் கூட்டங்களும் நடத்தி ஊழியம் செய்தனர். பயணிகளில் அநேகர் மனந்திரும்பினர். நாங்கு மாதப் பயணத்திற்குப் பிறகு சென்னைத் துறைமுகத்தில் மறைதிரு. லவ்லெஸ் தம்பதியர் இவர்களை வரவேற்றனர். சென்னைக்கு வந்தவுடன் சார்லஸ் மீட் சுகவீனமானார். எனவே சென்னையிலிருந்த நாட்களில் தமிழ் படிப்பதிலும், ஊழியம் செய்வதிலும் செலவழித்தார். அங்கிருக்கும்போது திருமதி மீட் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஓரளவு சுகம்பெற்று மீட் ஐயர், தன் மனைவி குழந்தையோடு 1817 ல் திருவிதாங்கூர் செல்ல சென்னையிலிருந்து கப்பலேரினார். பிரசவத்திற்குப்பின் சுகவீனமாக இருந்த திருமதி மீட், பயணத்தில் அதிக வியாதிப்பட்டு பினாங்க் என்ற இடம் சேரும்போது கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

அந்நிய தேசத்தில் மிஷனெரிப்பணி செய்ய ஆவலாய்ப் புறப்பட்டு வந்த மீட் ஐயருக்கு இது தாங்கொண்ணா வேதனையாயிருந்தது. கிறிஸ்துவுக்குள் ஆறுதலடைந்து, “கலப்பையின் மேல் கை வைத்த பின்பு பின்னிட்டுப் பார்க்காது தன்னை அழைத்தவர் இறுதிவரை நடத்துவார்” என்று விசுவாசித்து, கைக்குழந்தையுடன் குளச்சல் துறைமுகத்திற்கு கப்பலேறி தனக்குப் குறிக்கப்பட்ட மைலாடி பணித்தளத்திற்குச் சென்று சேர்ந்தார். ரிங்கல்தௌபே ஐயர் ஏற்படுத்தியிருந்த ஏழு திருச்சபைகளை, வேதமாணிக்கம் உபதேசியார், மிகவும் கண்ணும் கருத்துமாகக் கட்டிக்காத்து சபைப் பொறுப்புகளை மீட் ஐயரிடம் ஒப்படைத்தார்.

திருவிதாங்கூர் அரசியல் நிலவரம்:


சுதந்திரத்திற்கு முன் இந்திய தேசத்தில் சிறப்பாக எண்ணப்பட்ட 56 நாடுகளில் திருவிதாங்கூரும் ஒன்று, இந்தியாவின் தென்கோடியிலிருக்கும் இந்நாட்டில் மன்னர் ஆட்சி நடைபெற்றது. ஆங்கிலேயரிடம் சமாதானமாக இருந்து கப்பம் கட்டி வந்தனர். உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற பிரிவினையால் சில மக்களைத் தீண்டத்தகாதவர்களாக எண்ணி அடிமைப் படுத்தியிருந்தனர். அவர்கள் உயர்ஜாதி மக்கள் நிலத்தில் அடிமை வேலை செய்து வந்தனர். பெண்களை அதிகம் இழிவுப்படுத்தும் நாடாக காணப்பட்டது. கீழ் மக்களில் ஆண்கள் இடுப்புக்கு மேலும் முழங்காலுக்கும் கீழும் ஆடை அணியக்கூடாது. பெண்கள் சட்டை போடக்கூடாது. இவர்கள் தலை வரி, தாலி வரி, வலை வரி, செக்கு வரி, ஏணிக்கு வரி, அரிவாளுக்கு வரி, குடுவைக்கு வரி என்று பலவகை வரிகளைச் செலுத்தும்படி நிர்ப்பந்தப் படுத்தப் பட்டிருந்தனர். ரிங்கல்தௌபேவால் ஏற்ப்படுத்தப்பட்டிருந்த ஏழை சபைகளும் பள்ளிக்கூடங்களுமே அன்றைய மக்களின் அறிவுக் கண்களைத் திறக்க உதவின.

சார்லஸ் மீட் ஐயரின் தீவிர சுவிசேஷப் பணி:

சார்லஸ் மீட் ஐயர் கைக்குழந்தையுடன் திருச்சபைகளுக்குச் சென்று ஏழைக் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். புதிய கிராமங்களிலும் சுவிசேஷப் பணியைத் துவக்கினார். சென்னையில் படித்த தமிழ் இதற்கு மிகவும் உதவியாக இருந்தது. ஆசிரியராகவும், உபதேசியாராகவும் பணிசெய்ய ஊழியர்களைச் சந்தித்து தேவையான போதனைகள், பயிற்சிகள் கொடுத்து ஊக்குவித்தார். சிறுபிள்ளை கையிலிருந்தாலும் சுவிசேஷ வேலைக்கு அது தடையாக இல்லை. புதிய கிராமங்களில் சுவிசேஷம் அறிவித்து ஆராதனைக் குழுக்களை நிறுவினார். நாகர்கோவிலில் ரெசிடெந்த் அதிகாரி தங்கும் பங்களாவையும், தோட்டத்தையும் மிஷனெரிப் பணிக்கென்று இங்கிலாந்து ராணியிடமிருந்து தானமாகப் பெற்றார். நாகர்கோவிலுக்கு பணித்தளத்தை மாற்றினார். இது மாவட்டம் முழுவதும் சுற்றுப்பணி செய்ய மையப் பகுதியாக இருந்தது.

மாவட்ட நீதிபதியாக சார்லஸ் மீட் ஐயர்:

நாகர்கோவிலில் மாவட்ட நீதிமன்றத்தில் கிறிஸ்தவரை நீதிபதியாக நியமித்தால் வழக்குகள் நியாயமாக நடைபெறுமென்று கர்னலாகப் பணிபுரிந்த மன்றோ நினைத்து சார்லஸ் மீட் ஐயரின் பெயரை இங்கிலாந்து ராணியிடம் பரிந்துரைத்தார். இது நல்லது என்று கண்ட ராணி, மீட் ஐயரை மாவட்ட நீதிபதியாக நியமித்தார். சுவிசேஷப்பணியின் மத்தியில் நீதிபதியாக பணியாற்றுவது மிகுந்த சிரமமாக இருந்தாலும் கிறிஸ்துவுக்குள் மகிமையாகவும் மிகுந்த ஜெபத்துடனும் வழக்குகளுக்கு தீர்ப்புக் கூறி மக்களின் பாராட்டையும் பெற்றார். அதுவரை கிறிஸ்தவர்களைத் துச்சமாக எண்ணியவர்கள் அதுமுதல் கிறிஸ்து மார்க்கத்திற்கு மதிப்புக்கொடுத்து தங்கள் கிராமத்திலும் வந்து கூட்டங்கள் நடத்த அழைப்புக் கொடுத்தனர். வாரத்தில் ஒரு நாள் உபதேசியார்களை அழைத்து பிரசங்கங்களைப் பற்றியும், அடுத்த வாரம் நடத்த வேண்டிய பள்ளிப் பாடம் பற்றியும் பயிற்சி கொடுத்தார். இதனால் ஊழியர்கள் வல்லமையுள்ள உபதேசியார்களாகவும், திறமையான ஆசிரியர்களாகவும் பிரகாசித்தனர். திருச்சபைகளும், பள்ளிகளும் திருப்தி அடைந்தன. சுமார் 3,000 ஆத்துமாக்கள் கிறிஸ்து மார்க்கத்தில் புதிதாக இணைந்தன.

சுதேச ஊழியர்களை ஏற்படுத்தினார்:

திருச்சபைகள் ஏராளம் எழும்பிற்று. இச்சபைகளுக்குச் சென்று ஆராதனை நடத்தவும் சபையாருக்கு ஆலோசனை, உபதேசம் சொல்லவும் மிகவும் சிரமப்பட்டனர். மிஷனெரிகளுக்குப் பிரயாண வசதிகளும் குறைவு, குதிரையிலோ, மாட்டு வண்டியிலோ தான் செல்லவேண்டும் ஆகவே ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் சபைகளிலிருந்தும் ஆர்வமுள்ள வாலிபர்களைத் தேர்ந்தெடுத்து கல்வியும் வேத அறிவும் புகட்டி அந்தந்த சபைகளுக்கு உபதேசிகளாக நியமிக்கவேண்டுமென்று திட்டமிட்டு 1819 ல் நாகர்கோவிலில் செமினெரி பள்ளிக்கூடம் (வேதாகம பள்ளிக்கூடம்) ஒன்றை நிறுவினார். இதில் தமிழும், ஆங்கிலமும், வேதாகமமும் கற்றுக்கொடுக்கப்பட்டது.

கும்பகோணத்தில் பணி:


1825ம் வருட மத்தியில் இரவு பகலாக உழைத்த சார்லஸ் மீட் ஐயர் சுகவீனப்பட்டு சிலகாலம் தஞ்சையில் தங்கி சிகிச்சை பெற்று ஓய்வெடுத்தார். சுகமானபிறகு கும்பகோணத்தில் தங்கி ஊழியம் செய்தார். அங்கு அநேகர் கிறிஸ்து மார்க்கத்தை ஏற்றுக்கொண்டனர். ஆலயமும், பள்ளிக்கூடமும் கட்டி எழுப்பினார். கும்பகோண ஊழியங்களை உபதேசியார் பொறுப்பெடுக்க மீட் ஐயர் மறுபடியும் நாகர்கோவில் திரும்பி பணி செய்தார், 1827-ல் நாகர்கோவிலில் 15 சபைகள், 7 உபதேசிமார், 1410 விசுவாசிகள், 36 பள்ளிக்கூடங்கள் இருந்தன. நெய்யூரில் 11 சபைகள், 16 உபதேசியார், 1441 விசுவாசிகள், 21 பள்ளிகள் இருந்தன.

கிறிஸ்தவர்களுக்கு வந்த உபத்திரவம்:

கிறிஸ்தவ மார்க்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள் ஞாயிற்று கிழமைகளில் ஆராதனைக்குச் செல்வதால் அன்று வேலைக்கு வரமாட்டோம் என்றும், விக்கிரக கோவில் வேலைகளுக்கும் இனி தங்களால் வரமுடியாது என்றதினால் ராஜ்யத்தில் செல்வாக்குப் பெற்ற முதலாளிகள் மிகவும் கோபமடைந்தனர். கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களில் படித்த வாலிபப் பெண் பிள்ளைகள் மிஷனெரிகளிடமிருந்து சட்டை தைத்து அணிந்து ஆராதனைக்குச் சென்றனர். பெண்கள் மேலாடை அணிய அனுமதிக்காத இந்தப் பகுதியில் இது பெரும் சர்ச்சையை உண்டு பண்ணியது. இதற்குக் காரணம் கிறிஸ்தவ மிஷனெரிகளும், ஆலயமும் அவர்களது பள்ளிக்கூடங்களுந்தான் என்று முதலாளிகள் எரிச்சலடைந்தனர். பள்ளிகளையும், தேவாலயங்களையும் தீக்கொளுத்தினர். பெண்களின் மேலாடைகளை கிழித்து அவமானப்படுத்தினர். மிஷனெரிகளையும், உபதேசியார்களையும், ஆசீரியர்களையும் கண்ட இடங்களில் அடித்து சித்திரவதை செய்தனர். ஆராதனைக்கு வருவோரை தடுத்து அடித்து விரட்டி வேத புத்தகங்களைக் கிழித்து எரித்தனர். இதனால் கிறிஸ்தவ மார்க்கத்தில் இரகசியமாக இருந்தவர்கள் வெளியரங்கமாகப் பலப்பட்டார்கள். கிறிஸ்தவர்களுக்கு விரோதமாகப் பொய் வழக்குகள் புனையப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டனர். கிறிஸ்தவர்களின் உடைகள் சூறையாடப்பட்டன. கிறிஸ்தவப் பெண்கள் மானப்பங்கப்படுத்தப்பட்டனர். நிவாரண வழக்குகளில் மீட் ஐயர் தாமே சென்று வழக்காடி கிறிஸ்தவர்களை விடுவித்தார். இவ்வாறு கிறிஸ்தவர்களுக்கு உதவிவரும் மீட் ஐயரைக் கொலை செய்யக் திட்டம் திட்டி குறிக்கப்பட்ட நாளில் ஆயுதம் ஏந்திய 300 பேர் காட்டில் கூடி பூஜைசெய்து மீட் ஐயரின் வீட்டை நொறுக்கினர். இதனை உதயகிரிகோட்டையில் கேப்டனாக இருந்த சிபால்ட் அறிந்து, உடனே ஒரு படையை அனுப்பி தீவிரவாதக் கும்பலை சிதறடிக்கச் செய்தார். இப்படியாக கர்த்தர் தமது ஊழியரைக் காத்தார். இந்த உபத்திரவங்களுக்குப் பிறகு மீட் ஐயர் நெய்யூரில் தங்கி தேவப்பணி செய்தார். நெய்யூரின் 1831 ம் ஆண்டு ஆலயம் கட்டப்பட்டது. போர்டிங் பள்ளிக்கூடமும் நிறுவப்பட்டது. மீட் ஐயருடைய 3 குமாரர்கள் 1832, 1836, 1838-ம் வருடங்களில் ஒன்றன்பின் ஒன்றாக மரித்தனர். இது தாங்க முடியாத துக்கத்தைக் கொடுத்தாலும் ஊழியத்தை தொடர்ந்து செய்தார். தேவ கிருபையால் பெலன் பெற்றார்.

இங்கிலாந்தில் மீட் ஐயர்:


ஊழியத்திற்கென்று புறப்பட்டு வந்து சுமார் 19 வருடங்களுக்குப் பின் வேலைப்பளுவினால் சோர்புற்று சிகிச்சைக்காக இங்கிலாந்து சென்றார். இங்கிலாந்தில் எங்கு சென்றாலும் இந்திய ஊழியத்திற்கு ஆதரவு சேர்ப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தார். இந்தியாவில் பணி செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும். ஜெப உதவி, பண உதவி வேண்டுமென்று மக்களுக்கு அறைகூவல் கொடுத்தார். அதிக நாட்கள் அவரால் அங்கு இருக்க முடியவில்லை. திருவிதாங்கூரில் ஏழை மக்கள் மத்தியில் மிஷனெரிப்பணியை மீண்டும் செய்ய வாஞ்சித்து புதிதாக 5 மிஷனெரிகளுடன் 1837-ம் ஆண்டு புறப்பட்டு கொல்லத்திற்கு வந்து நெய்யூர் சேர்ந்தார்.

நெய்யூர் மிஷன்:
டாக்டர் ராம்சே என்பவரின் துணையைக் கொண்டு மருத்துவ ஊழியம் ஆரம்பிக்கப்பட்டு வியாதியஸ்தர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. மருத்துவ உதவியாளர் பயிற்சியும் தொடங்கப்பட்டது. 1840-ம் வருடத்தில் 6867 கிறிஸ்தவர்களும், 100 உபதேசியார்களும், 2703 மாணவர்களும், 18 வேதாகம மாணவர்களும் இருந்தனர். தனது இறுதி நாட்களில் அநாதை பள்ளிகளுக்கும் அச்சுக்கூடத்திற்கும் பொறுப்பாக திருவனந்தபுரத்தில் பணிபுரிந்தார். தனது 85-ம் வயதில் 1873-ம் ஆண்டு கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். 1818-ம் ஆண்டு குளச்சல் துறைமுகத்தில் கையில் குழந்தையுடன் வந்து இறங்கிய மீட் ஐயர் தமது 35 வருட உழைப்பால் ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை நாகர்கோவிலில் சம்பாதித்தவர். இன்று உலகம் முழுவதிலும் இந்த ஆத்துமாக்கள் ஊழியர்களாகப் புறப்பட்டுச்சென்று கிறிஸ்துவின் வருகைக்கு அநேக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தி வருகின்றனர்.

No comments: