10. உயிர் மீட்சியில் கடவுள் தமது வல்லமையை விளங்கப்பண்ணுகிறார்:
ஆதித் திருச்சபையின் காலஙள் உயிர்மீட்சியின் காலங்களே. இக்காலத்தின் பிரச்சினையைத்தீர்க்கும் வழி உயிர் மீட்சியேயொழிய வேறில்லை. உயிர்மீட்சியின்றி எந்தச் சபையும் நிலைத்திருப்பது சந்தேகம் கடவுள் தமது வல்லமையைப் பலமாய் வெளிப்படுத்தும்படி ஜெபிக்கிறவர்கள் உலக முழுவதும் இருக்கிறார்கள். அந்த ஜெபங்கள் கேட்கப்படுமா? உயிர்மீட்சி உண்டாகுமா? அது ஏற்படுமானால் அது எதைப்போலிருக்கும்? அது உண்டாகும்படி நாம் செய்ய வேண்டியது என்ன? சங்கீதம் 85:6 இல் காணப்படும் ஜெபத்திற்கு நமது காலத்தில் பதில் அளிக்கப்படுமா? "உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?" நமது கண்கள் தேவன் மேலேயே இருக்கின்றன. அவர் மட்டுமே தமது ஜனங்களை உயிர்ப்பிக்கக்கூடியவர். அவர் அப்படிச் செய்யும்போது சபை ஒரு தலைமுறையும் அறிந்திராத அப்படிப்பட்ட சந்தோஷம் உண்டாயிருக்கும். உயிர் மீட்சி நமக்கு எப்பொழுது அவசியம்: நான் சில முக்கியமான கேள்விகலைக் கேட்டு அவைகளுக்கு உத்தரவு சொல்லுகிறேன். முதலாவது உயிர் மீட்சி நமக்கு எப்பொழுது அவசியம் என்றால்: நாம் ஆதியில் கொண்ட அன்பை இழக்கும்போது நமக்கு உயிர் மீட்சி தேவை. என் சிநேகிதனே, நீர் இரட்சிக்கப்பட்ட சமயத்தில், ஆத்துமாக்கள் பேரில் உமக்கிருந்த அன்பையும், தேவ சமுக உணர்ச்சியையும் யோசித்துப் பாரும். ஜெபத்திலும், சாட்சி கூறுவதிலும், சுவிசேஷக் கீர்த்தனைகள் பாடுவதிலும் உனக்கிருந்த அன்பையும், ஆவலையும் ஞாபகத்திற்குக் கொண்டுவர ஒற்றைத்தாள் பிரதிகளை மற்றோரிடம் கொடுத்தபோதும், யாரையாவது ஒருவரைக் கிறிஸ்துவண்டை வழிநடத்தினச் சமயத்திலும் உமக்கிருந்த வாஞ்சையை சிந்தனைசெய்யும். ஆண்டவருக்கென்று நீர் எவ்வளவு உற்சாகத்துடன் ஊழியம் செய்தீர்! எவ்வளவு பிரியத்துடன் வேதாகமத்தை வாசித்தீர்! ஆனால் இன்று எப்படியிருக்கிறீர்? அந்த உணர்ச்சி இப்பொழுது இருக்கிறதா? உம் இருதயத்தினின்று கர்த்தரின் சந்தோஷம் போய் விட்டதா? வேத வாசிப்பையும், ஜெபத்தையும் நீர் அசட்டை செய்கிறீரா? ஆதியில் நீர் கொண்ட அன்பு மறந்துபோய் இப்பொழுது சகலமும் சாதாரணமாய்க் காணப்படுகிறதா? அப்படியானால் என் சிநேகிதனே, உமக்கு உயிர் மீட்சி அவசியம். ஆத்துமாக்களைப்பற்றிய பாரம் உன்னை விட்டு நீங்கிப் போயிற்றென்றால் உனக்கு உயிர் மீட்சி அவசியம்: உனக்குப் பிரியமானவர்கள் அழிந்துபோகையில் நீ மோட்ச பாதையில் நடப்பது கூடிய காரியமா? அவர்களைப்பற்றிய பாரம் உனக்கு இல்லை என்பது உண்மையா? அவர்கள் நரக பாதாளம் போகிறார்கள் என்று நீ தெளிவாய் அறிந்திருந்தும் நீ மன நிம்மதியோடு இருப்பது முடியுமா? உனது பெற்றோர், மனைவி, மக்கள், கணவன் இவர்களைக் குறித்தென்ன? அவர்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்களா? அல்லது அழிவின் பாதையில் இருக்கிறார்களா? அதைப்பற்றிய பாரம் உனக்கு இல்லையா? என்னுடைய மகன் அல்லது மகள் இரட்சிக்கப்படவில்லை என்று அறிவேனாகில், நான் எப்படிச் சாப்பிடவும் தூங்கவும் முடியும்? அவர்களுக்காக நடு ராத்திரி மட்டும் தேவ சமுகத்தில் அழுது பிலம்புவேன். அவர்கள் இரட்சிக்கப்ப்டுமட்டும் ஆண்டவரை விடமாட்டேன். என் கண்கள் கண்ணீரினாலும் என் இருதயம் துக்கத்தினாலும் நிறைந்திருக்கும். அவர்கள் சரியான தீர்மானஞ் செய்யுமளவும் நான் இளைப்பாறமாட்டேன். என் குடும்பம் பிரிந்து போவதைப் பார்த்து நான் எப்படிச் சும்மாயிருப்பேன்? "நீயும், உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" என்பதே கடவுளின் வாக்கு. அதை நம்புகிறேன். என் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் குணப்படும்படி விரும்புகிறேன். அப்படியில்லாவிடில் அதை நான் சகிக்க முடியாது. என் மூத்த மகனை, நானும் என் மனைவியும் கிறிஸ்துவண்டை நடத்தினதினால், அவன் தன் ஒன்பதாவது வயதில் இரட்சிக்கப்பட்டான். என் பிரசங்கம் ஒன்றில் அவன் கடவுளின் சமுகத்தில் அழுத்தை நான் ஒருபொழுதும் மறக்கமுடியாது. அவன் வீட்டுக்குச் சென்றபோது, சிவந்த கண்களோடு தான் இரட்சிக்கப்பட விரும்புகிறதாக எங்களிடம் வந்து சொன்னான். அவன் தனது படுக்கப் பக்கத்தில் குணப்பட்டான். அவன் இப்போது டொரான்டோவிலுள்ள ஜெனரல் ஆஸ்பத்திரியில் டாக்டர் வேலைக்காக விசேஷித்த படிப்பு படிக்கிறான். கர்த்தருக்காக உழைக்க அவன் ஆவலாயிருக்கிறான். என் மகள் 10 வயதில் இரட்சிக்கப்பட்டாள். அவள் படுக்கையண்டை நானும், அவள் தாயும் ஜெபித்தபோது, அவள் கிறிஸ்துவண்டை வழிநடத்தப்பட்டாள். அவளும் தன் இரட்சிப்பின் அவசியத்தை உணர்ந்து கண்ணீர் சிந்தினாள். அவளுக்கு இப்போது இரண்டு சிறு குழந்தைகளிருக்கின்றன. இன்றும் அவள் கர்த்தரின் பிள்ளையாகவே ஜீவிக்கிறாள். என் சின்ன மகன் இப்போது பாப்திஸ்து சபையில் சுவிசேஷகனாக இருக்கிறான். அவன் ஐந்து வயதாகிறதற்கும் இரட்சிக்கப்பட்டான். டொரான்டோவிலுள்ள மாசே என்னுமிடத்தில் நான் பிரசங்கம் செய்கையில் 3,400 மக்கள் உட்கார்ந்திருந்தனர். நான் அவர்களுக்கு அழைப்புக் கொடுத்தேன். 5 வயதுள்ள என் சொந்த மகன் உறுதியான தீர்மானத்துடன் என்னிடம் வருகிறதை நான் கண்டேன். பீடத்தின் பக்கம் வந்து, முழங்காற்படியிட்டு ஜெபித்தபோது, இயேசுநாதர் அவன் இருதயத்தில் பிரவேசித்தார். ஒரு குருவானர் ஒரு சுவிசேஷப் பிரசங்கம் செய்து, பின்பு ஜனங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்படியாக ஒரு தருணம் கொடாதபடி ஆசீர்வாதம் மட்டும் கூறித் தன் வீட்டிற்குப் போவது எனக்கு விளங்காத காரியமாயிருக்கிறது. ஒவ்வொரு ஞாயிரும் ஒருவராவது இரட்சிக்கப்டுவதைக் காணாமல் ஒரு போதகர் இருப்பது எனக்கு விளங்கவில்லை. ஒரு வக்கீல் தன் வழக்கில் ஜூரிகளின் அபிப்பிராயத்தைகேட்க ஆசைப்படுகிறதுபோல் ஒரு போதகரும் தன் பிரசங்கத்தின் பலனைக் காண ஆசைப்படவேண்டும். பலனைத் தருவேன் என்று வாக்கருளியிருக்கிறார். விதை விதைப்பதுமட்டுமல்ல, அறுவடை செய்வதும் சுவிசேஷகருக்கு நியமிக்கப்பட்ட சிலாக்கியமே. என் ஊழிய காலம் முழுவதும் நான் அழைப்புக் கொடுப்பேன். ஒவ்வொரு ஞாயிறு இரவிலும் நான் ஆண்களையும் பெண்களையும் முன்னே வரும்படி அழைத்து விசாரனை அறைக்கு வந்து இரட்சகரை ஏற்றுக்கொள்ளச் சொல்லுகிறதுண்டு. நான் ஏமாந்துபோவது அபூர்வம் ஒருவரும் வரவில்லையென்றான் நான் என் வீட்டுக்குப் போய், தரையில் முகத்தைப் பதித்துக் கர்த்தரை நோக்கி, வருமாறு கதறுவேன். "என்னிடம் என்ன குறை இருக்கிறது? என்ன நடந்தது? இன்று ஓர் ஆத்துமாவும் வரவில்லையே" என்பேன். நான் என்னையே குற்றப்படுத்திச் சொல்லுவேன். சில சமயம் நான் மிக்கக் கஷ்டமாய்க் காணப்பட்டால், எனக்கு உதவி செய்யும் ஊழியர்கள், ஆலயத்தில் தங்கள் தங்களைத் தாழ்த்தி அழுது ஜெபிப்பார்கள். யாராவது விசாரணை அறைக்கு வந்துவிட்டால், கர்த்தருக்குள் சந்தோஷப்பட்டு முகமலர்ச்சியோடு விசாரணை அறைக்கு போவார்கள். பலனை எதிர்பார்த்த அவர்கள் வெட்கப்படவில்லை. எப்படியும் பிரதி ஞாயிறு இரவிலும் சிலராவது வருவார்கள். சில சமயத்தில் ஏதோ காரணமாக பகிரங்கமாக ஒருவரும் வரவில்லையானாலும், அச்சமயந்திலும் பலன் பிந்திக் கிடைக்கும். "உன் விசுவாசத்தின்படியே உனக்கு ஆகக்கடவது." பலன் கிடைக்குமென விசுவாசியுங்கள்; அப்படியே கிடைக்கும். நீங்கள் விசுவாசத்துடன் அழைப்புக் கொடுத்தால் கடவுள் கிரியை நடப்பிப்பார். நான் பிரசங்கம் செய்ய ஆரம்பித்ததுமுதல், நான் அழைப்புக் கொடுக்கும்போது சிலராவது வருவார்கள் என்று எதிர்பார்ப்பேன். என் நண்பா, ஆத்துமாக்கள் பேரில் கவலை உனக்கில்லையானால் உனக்கு உயிர்மீட்சி அவசியம். பலன் காணாமல் வருடா வருடம் நீ திருப்தியாயிருந்தால் ஏதோ தப்பிதம் உன்னில் இருக்கிறது. நீ முழங்கால்படியிட்டு, மனஸ்தாபத்தோடு பாவ அறிக்கை செய்து, கர்த்தர் உன் உள்ளத்தில் உயிர்மீட்சியை உண்டாக்கும் மட்டும் ஜெபி. உன் இருதயம் அனல் கொண்டபின் மற்றவர்களையும் அனல் மூட்டிவிட உனக்குப் பெலன் உண்டாகும். முடிவில் உன் சபை முழுவதும் அனலுள்ளதாயிருக்கும். என்ன நேரிடும்? உயிர்மீட்சி உண்டானால் என்ன நேரிடும்? உயிர்மீட்சியை விரும்பாத போதகர்களும், தேவ ஊழியரும், சபையாரும் இருக்கிறார்கள். உயிர்மீட்சி உண்டானால் மிஞ்சிய உற்சாகம் ஜனங்களுக்குள் உண்டாகும் என்ரும், ஆராதனைக்குப் பல இடையூறுகள் ஏற்படும் என்ரும் பயப்படுகிறார்கள் மாமூலாய் நடக்கும் ஜெப புத்தக ஒழுங்கையே நாம் கைக்கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள். அப்போஸ்தலர் நடபடிகளில் இப்பேர்ப்பட்ட தடைகள், நேரிட்டதைப் பார்க்கிறோம். பேதுரு, பவுல் பிலிப்பு முதலானவர்களின் ஊழியத்தில் அடிக்கடி இடைஞ்சல்கள் நேரிட்டன. உயிர்மீட்சி முதலாவது தேவனுடைய பிள்ளைகளுக்கு உண்டாகிறது; இரட்சிக்கப்படாதவர்களுக்கல்ல, எழுப்புதல் நடக்கும் சமயத்தில் இரட்சிக்கப்படாதவர்கள் கிறிஸ்துவண்டை கொண்டுவரப்படாமல் இருக்கமாட்டார்கள். தீப்பொறியின் மூலந்தான் நெருப்பு உண்டாக்கலாம். தீப்பொறி அவிந்து போனால் நெருப்பு உண்டாக்க முடியாது. இதைப்போலவே உயிருள்ளவர்களையே அனல் மூட்டமுடியும். செத்தவர்களை எழுப்ப முடியாது. தேவனுடைய பிள்ளைகள் அக்கினியினால் நிரப்பப்படும் சாத்தானின் பிள்ளைகளும் நெருப்பைச் சூழ வந்து கூடுவார்கள். ஒரு வீடு நெருப்புப் பற்றினதென்றால் ஜனங்கள் பல திசைகளிலுமிருந்து அங்கு ஓடுவார்கள் இப்படியே உயிர்மீட்சியும் இருக்கிறது. ஒரு சபை அனல் கொண்டு பிரகாசிக்கும்போது, உலகத்தார் அதைக் காணவருவார்கள். ஆகவே, உயிர்மீட்சி முதலாவது கிறிஸ்தவர்களுக்குள் உண்டாகி, பின்பு ஆத்துமாக்களின் இரட்சிப்பில் வந்து முடியும். "நீர் எங்களைத் திரும்பவும் உயிர்ப்பிக்கமாட்டீரோ?" என்று அவன் அழுத்தமாய்க் கூறி, அப்பதத்தால் தேவனுடைய ஜனங்களைக் குறிப்பிடுகிறான்.
இரட்சிப்பு: உயிர்மீட்சி உண்டானால் உலகத்திலுள்ளவர்கள் கிறிஸ்தவர்களிடம் ஓடி வருவது மட்டுமல்ல. ஆத்துமாக்களும் இரட்சிக்கப்படுவார்கள். ஜனங்களுக்குள் பாவ உணர்ச்சி ஏற்படும். பாவ பாரம் தோன்றும். தற்காலத்தில் பாவம் பாரமாகக் காணப்படவில்லை. அது தேவ பார்வையில் எவ்வளவு பயங்கரமானது என்பதை மக்கள் அறியாதிருக்கிறார்கள். ஆத்தும இரட்சிப்புக்குப் பாவ உணர்வு அவசியம். தேவ வல்லமை வெளிப்படுதலே உயிர்மீட்சி. நாம் தேவ வல்லமையை வெகு சொற்பமாய் அறிந்திருக்கிறோம். நமது ஆராதனைகளில் தேவ வல்லமை காணப்படுகிறதா? உயிர்மீட்சிக் கூட்டங்களில் தேவ சமுகம் இருப்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
நமது ஆராதனைகளில் கடவுள் சமுகம் இருப்பதால் புறமதஸ்தர் தேவனுடைய வல்லமையைக் கண்டு வியப்படைகிறார்களா? நியாயத்தீர்ப்பு: உயிர்மீட்சி உண்டாகும் காலத்தில் இரட்சிப்பு மாத்திரமல்ல, நியாயத்தீர்ப்பும் உண்டாகும். கடந்த கால உயிர்மீட்சிகளைப்பற்றி படித்துப் பாருங்கள். மனிதர்கள் துணிகரமாய்த் தேவ ஆவியானவரின் கிரியைகளுக்கு எதிர்த்து நிற்கும்போது தேவன் அவர்களை உடனுக்குடனே தண்டித்துத் தீர்ப்புச் செய்கிறார் என்று பார்க்கிறோம். சில சமயங்களில் அனனியா சப்பீராளுக்குச் செய்ததுபோல் மரணதண்டனையும் கொடுக்கிறார். சார்லஸ் பின்னி, வெஸ்லி இவர்கள் இதற்குச் சாட்சிகளாயிருக்கிறார்கள். இவர்கள் ஊழிய காலத்திலும் எதிர்த்தவர்களுக்குத் தேவன் நீதி செய்தார். உயிர்மீட்சி காலத்தில் தேவனை எதிர்ப்பதும், அவரது காரியங்களில் வீணாகத் தலையிடுவதும் மோசமாய் முடியும் என்பது சத்தியம். மற்றவர்களுக்கு ஓர் எச்சரிப்பாக நாஸ்தீகரை உடனுக்குடனே கடவுள் கணக்குக் கேட்கிறார். இதன் மூலம் கடவுள் உயிரோடிருக்கிறார் என்று ஜனங்கள் அறிந்து கொள்ளுகிறார்கள். கிளார்க் என்ற மிஷனெரியார் கூறின ஒரு சம்பவத்தைச் சொல்லுகிறேன். மதுக்கடைக்காரன் ஒருவன் உயிர்மீட்சிக் கூட்டத்தை எதிர்த்துப் பேசிக் கொண்டிருந்தான். அவனது வாடிக்கைகாரர்கள் வராமல் நின்றுவிட்டதே இதற்குக் காரணம். ஒருநாள் இரவில் அவன் பிரசங்கியாரைப் பயமுறுத்தி, ஜனங்களைத் திரும்பவும் தன் கடைக்கு இழுக்க வேண்டுமெனத் தீர்மானஞ் செய்தான். அப்படியே அன்று இரவில் அந்த உயிர்மீட்சிக் கூட்டத்திற்குப் போனான். கிளார்க் பிரசங்கியார், பிரசங்க வசனம் தெரிந்து கொள்ளுதலைப்பற்றி நெடுநேரம் திகைத்துக் கொண்டிருந்தார். கடவுள் அவருக்குத் திரும்ப காட்டின வசனமோ "உன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்து, நீ மரித்துப் போவாய், நீ பிழைக்கமாட்டாய்" என்பதே, பிரசங்கியார் இவ்வாக்கியத்தை விட்டுவிட முயன்றும் முடியாததால், பிரசங்க மேடைமீது ஏறு நின்று, அந்த வசனத்தைக் கூறினவுடன், அந்தக் கடைக்காரன் எழுந்து நின்று அவர்மேல் சாபம் கூறினான். திடீரென அவன் சத்தம் நின்றது; தொனியில் நேர்மாற்றம் உண்டானது இருமல் வந்தது. இரத்தம் வாயிலிருந்து வெளிவந்தது. அடுத்த வினாடியில் அவன் உயிரற்றவனாய்த் தரையிலே விழுந்தான். கடவுளின் தீர்ப்பு அத்தனை சடுதியாய் வந்ததைக் கண்ட பாவிகள் இரட்சகரண்டை வந்து, மன்னிப்புப் பெற்று இரட்சிப்பும், நியாயத்தீர்ப்பும் நடைபெறும்படி கடவுள் செய்கிறார். அபிவிருத்தி: உயிர்மீட்சி உண்டானால் சபை, அநேக வருடங்களில் செய்யக்கூடிய ஊழியத்தை சில வாரங்களில் செய்து நிரைவேற்றுகிறது. இதற்கு அத்தாட்சியாக சில உதாரணங்களைக் கூறுகிறேன். 1904 இல் வேல்ஸ் நாட்டில் இவான் ராபர்ட்ஸ் என்பாரின் மூலம் நடபெற்ற உயிர்மீட்சிக் கூட்டங்களால் நான் அனல்கொண்டேன். நான் அவர் வீடு சென்று அவரைக் கண்டு பேசினேன். அவர் சாதாரண வீட்டில் வசித்தார். அவர் ஓயாது வாசித்துக்கொண்டேயிருப்பார். கடவுளின் கரம் அவரைப் பிடித்து, வல்லமையாய் அவரை வேல்ஸ் நாட்டில் உபயோகித்தது, அவர் நடத்தின உயிர்மீட்சிக் கூட்டங்களின் மூலம் ஐந்து வாரங்களில், 20,000 பேரை சபையில் சேர்ந்தார்கள். அமெரிக்காவிலும், கனடாவிலும் பிரிட்டனிலும் உள்ள எல்லாச் சபைகளின் குருக்களும் சேர்ந்து 5 வாரங்களில் 20,000 பேரைக் குணப்படுத்திச் சபையில் சேர்க்க முடியுமா என்று நீங்களே சொல்லுங்கள். சாதாரண சபை ஊழியத்தின்மூலம் இது நடைபெற முடியாது என்பது திண்ணம் அல்லவா? சார்லஸ் பின்னி என்பவர் அமெரிக்க ஐக்கிய மாகாணத்தில் ஊழியம் ஆரம்பிக்கையில் அங்கு இரண்டு இலட்சம் சபை அங்கத்தினர் மட்டும் இருந்தார்கள். ஆனால் அவர் ஊழியஞ்செய்த சில வருடங்களுக்குள் முப்பது இலட்சத்திற்குமேல் அங்கத்தினர்கள் இருந்தார்கள். ஆம், ஒரு மனிதனுடைய ஊழியத்தினால் எத்தனை அற்புதமான செயல்! வேறு எந்த இடத்திலாவது இத்தனை திரள் பலன் கிடைத்ததா? கடவுள் சாதாரண சபைகளைக் கொண்டு அநேக வருடங்கள் செய்யும் ஊழியத்தால் உண்டாகும் பலங்களைவிட, உயிர்மீட்சிக் காலங்களாகிய சில வாரங்களில் அதிகப்பலன் உண்டாகும்படி செய்கிறார் என்பது உண்மையல்லவா? பின்னி பிரசங்கியார், நியூயார்க் நகரில், உயிர்மீட்சிக் கூட்டம் நடத்துகையில் 1,00,000 பேர் சபையில் சேர்ந்தார்களாம். உயிர்மீட்சி இல்லாமல் எப்படி நடக்குமா? ஆரம்பகால மெதடிஸ்டு பிரசங்கிமார்கள், கனடாவுக்கும், ஐக்கிய மாகாணத்துக்கும் வந்தபோது அவர்கள், குருக்களாக மாத்திரமல்ல, எழுப்புதல் பிரசங்கிமார்களாகவே வந்தார்கள். அவர்கள் எங்கு சென்றார்களோ அங்கெல்லாம் எழுப்புதல் அக்கினியைக் கொளுத்தினார்கள். அதன் பலனாகவே தற்சமயம் ஐக்கிய மாகாணத்தில் ஒரு கோடி மெதடிஸ்டு சபையார் இருக்கிறார்கள். மெதடிஸ்டு சபை உயிர்மீட்சிக் கூட்டங்கள் மூலமாகவே ஸ்தாபிக்கப்பட்டது. இதுவே உயிர்மீட்சிக் கூட்டங்களில் தேவன் நடப்பிக்கிற கிரியை.
No comments:
Post a Comment